உலகம்

20 லட்சம் மக்களை அழிப்பதில் எந்த நியாயமும் இல்லை - நேதன்யாகு முகத்திரையை கிழித்த இஸ்ரேல் முன்னாள் பிரதமர்
- கடந்த சில வாரங்களாக நடந்து வரும் கொலைகள் மற்றும் பசி பட்டினி எனது பார்வையை மாற்றியுள்ளன.
- பொறுப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட அரசாங்கக் கொள்கையின் விளைவாகும். ஆம், இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்கிறது.
காசா பகுதியில் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்து வருவதாக முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் செய்தித்தாளான ஹாரெட்ஸில் அவர் எஹுட் ஓல்மெர்ட் ஒரு கட்டுரையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசாங்கத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த கட்டுரையில் எஹுட் ஓல்மெர்ட் கூறுவதாவது,
"இஸ்ரேலுக்கு எதிராக சுமத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளை கடந்த ஒரு வருடமாக நான் பகிரங்கமாக மறுத்து வந்தேன். ஆனால் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் கொலைகள் மற்றும் பசி பட்டினி எனது பார்வையை மாற்றியுள்ளன.
காசாவில் நாம் நடத்துவது ஒரு அழிவுகரமான போர். சாதாரண மக்கள் கண்மூடித்தனமாக, கட்டுப்பாடுகள் இல்லாமல், கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இதற்கு ஒரு சில வீரர்களின் நடத்தை காரணமல்ல. இது வேண்டுமென்றே, தெரிந்தே, தீங்கிழைக்கும் நோக்கத்துடன், பொறுப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட அரசாங்கக் கொள்கையின் விளைவாகும். ஆம், இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்கிறது.
முதலாவது காசாவைப் பட்டினி போடுவது. கொள்கையின் ஒரு பகுதியாக, காசா மக்களுக்கு உணவு மற்றும் மருந்தை நாம் மறுக்கிறோம்.
பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்காக நேதன்யாகு பதில்களை மறைக்க முயற்சிக்கிறார். இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் சிலர் வெளிப்படையாக, பெருமையுடன் கூட, ஆம், நாங்கள் காசாவைப் பட்டினி போடுகிறோம் என்று கூறுகிறார்கள்.
காசாவின் சுமார் 20 லட்சம் மக்களை முற்றிலுமாக அழிப்பதில் எந்த தார்மீக அல்லது இராணுவ நியாயமும் இல்லை" என்று ஓல்மெர்ட் அந்தக் கட்டுரையில் தெரிவித்தார்.