உலகம்

பிடி வாரண்டுக்கு பயந்து ஐரோப்பிய வான்பரப்பை தவிர்த்து அமெரிக்கா பறந்த நேதன்யாகு.. ஐ.நாவில் பேசுகிறார்!
- நேதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
- ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக அட்லாண்டிக் பெருங்கடல் வான்பரப்பில் நுழைந்தது.
காசாவில் செய்து வரும் படுகொலைகளுக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2024 நவம்பர் 21 அன்று கைது வாரண்ட் பிறப்பித்தது.
விசாரணையில் நேதன்யாகு மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கண்டறியபட்டது.
தற்போது அமரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வரும் 80வது ஐநா கூட்டத்தில் பேசுவதற்காக நேதன்யாகு அமெரிக்கா பயணப்பட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட் காரணமாக, அமெரிக்காவுக்கான தனது பயணத்தின் போது நேதன்யாகு தனது பாதையை மாற்றியுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்துடன் ஒப்பந்தங்களைக் கொண்ட பல ஐரோப்பிய நாடுகள், நேதன்யாகு தங்கள் எல்லைகளைத் தாண்டினால் கைது செய்யப்படுவார் என்று கூறியிருந்தன.
இதைக் கருத்தில் கொண்டு, ஐ.சி.சி.யுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து நேதன்யாகுவின் பயணம் அமைந்தது.
இஸ்ரேலில் இருந்து அமெரிக்கா செல்ல பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து, இங்கிலாந்து வழியே செல்வதே நேர்வழி ஆகும். ஆனால் அவ்வழியை தவிர்த்த நேதன்யாகுவின் விமானம் கிரீஸ் மற்றும் இத்தாலியை ஒட்டி பயணித்து, மத்தியதரைக் கடலைக் கடந்து ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக அட்லாண்டிக் பெருங்கடல் வான்பரப்பில் நுழைந்தது. மத்திய தரைக்கடல் - அட்லாண்டிக் கடலை இணைப்பது ஜிப்ரால்டர் ஜலசந்தி ஆகும்.
கடந்த பிப்ரவரி, ஜூலை அமெரிக்கா பயணித்த போதும் நெதன்யாகுவின் விமானம் ஐரோப்பிய நாடுகளை தவிர்த்தே பயணித்தது. தற்போது அவர் பயணித்த பாதையின் ரேடார் விவரங்கள் வைரலாகி வருகின்றன.