உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ச்சுனன் வீட்டில் சோதனை நிறைவு: ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
- 13½ மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
- வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டிருந்தது.
கோவை:
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்மன் அர்ச்சுனன். இவர் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை செல்வபுரம்-சுண்டக்காமுத்தூர் ரோட்டில் திருநகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, லதா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் வந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் சென்று, அங்குள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி, அதனை சரிபார்த்தனர்.
மேலும் வங்கி கணக்கில் உள்ள பணம், வீட்டில் இருந்த நகைகளையும் ஆய்வு செய்த அதிகாரிகள் அது தொடர்பாகவும், எம்.எல்.ஏ.விடம் கேட்டனர். அவர் அதற்கான தகுந்த ஆதாரங்களை அதிகாரிகளிடம் வழங்கி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்.
சோதனையொட்டி அவரது வீட்டின் முன்பு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். அவரது வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டிருந்தது.
சோதனை நடப்பதை அறிந்ததும், அவரது வீட்டின் முன்பு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தாமோதரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம் மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இேதபோன்று, பெரியநாயக்கன் பாளையத்தில் அம்மன் அர்ச்சுனன் நடத்தி வரும் நிறுவனம் மற்றும் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அங்குள்ள கம்ப்யூ ட்டர்கள், ஆவணங்களை சரிபார்த்தனர்.
அம்மன் அர்ச்சுனன் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது இரவாகியும் நீடித்தது. இரவு 7.40 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இதேபோல் நிறுவனங்களில் நடந்த சோதனையும் நிறைவடைந்தது.
13½ மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
சோதனையின் போது, பல்வேறு ஆவணங்களை சரிபார்த்த போலீசார் அதனை எடுத்து சென்றதாக தெரிகிறது.
இதற்கிடையே லஞ்ச ஒழிப்புசோதனையில் தனது வீட்டில் எந்த பொருளையும் அதிகாரிகள் எடுத்து செல்ல வில்லை என அம்மன் அர்ச்சுனன் பேட்டி கொடுத்துள்ளார்.
எனது வீட்டில் நடந்த சோதனையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது. ரூ.2 கோடியே 6 லட்சம் எனது வங்கி கணக்கில் உள்ளது. 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இதற்கான அபிடவிட் தாக்கல் செய்துள்ளேன்
எனது வீட்டில் 2 மணி நேரம் தான் சோதனை நடந்தது. 7 மணிக்கு தான் செல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் இருந்தார்கள். அனைத்தும் சட்டப்படியாக சரியாக இருந்தது. வருமானவரித்துறையில் பதிவு செய்தது அனைத்தும் சரியாக தான் இருக்கிறது.
எனது வீட்டில் இருந்து அதிகாரிகள் பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளை மட்டுமே எடுத்துச் சென்றனர்.
அ.தி.முக தொண்டர்கள் எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம். என்னிடம் அதிகாரிகள் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
எனக்கு நடந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
இந்த வழக்கை நான் சட்டப்படி கோர்ட்டில் சந்திப்பேன். இந்த சோதனையை வைத்து அ.தி.மு.க. தொண்டனை அசைத்து பார்க்க முடியாது. உங்களுக்கு அச்சம் வந்ததால் சோதனை செய்கிறீர்கள். அ.தி.மு.க தொண்டர்கள் ஆலமர வேர் போன்று வலிமையாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.