உள்ளூர் செய்திகள்

கோவை விளாங்குறிச்சி தொழில்நுட்ப பூங்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.
- போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இதுகுறித்து கோவை வெடி குண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபர் கிரைம் போலீசில் இ-மெயில் கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேறு ஒரு இ-மெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே போலீசார் சென்று சோதனை நடத்தினர்.
தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் கோவை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நேற்று மாலை கோவை விமான நிலையம் அருகே விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டைட்டல் பார்க் கட்டிடத்திற்கும் வெடி குண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினர். டைடல் பார்க் பகுதியில் 2 கட்டிடங்களில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
அங்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் மலர் மற்றும் அயன் ஆகிய மோப்ப நாய்கள் கொண்டு போலீசார் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
கட்டிடங்களின் கார் பார்க்கிங் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடந்தது. 2 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் மீண்டும் புரளி என்றுதெரிய வந்தது. இந்த சோதனையால் அங்கு பரபரப்பு நிலவியது.
கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே நபர்தான் டைட்டல் பார்க்கிற்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.
அவரை பிடிக்க போலீ சார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.