உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பைபர் படகில் கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
- தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
- கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அத்தியாவசிய சமையல் பொருட்கள், மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலைகள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களை கண்காணிக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மண்டபம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 56 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் அதிகாரிகளின் வருகையை முன்கூட்டியே அறிந்து கொண்டு தப்பிச்சென்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் 304 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் இலங்கை கடற்படையால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இலங்கை வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உடுத்துறை கடற்பகுதியில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தமிழகத்திலிருந்து கடல் வழியாக கஞ்சா பண்டல்களுடன் வந்த படகை கண்டதும் இலங்கை கடற்படையினர் அந்த படகை நெருங்கினர். இதையடுத்து இலங்கை கடற்படையினரை கண்டதும் படகில் இருந்த வாலிபர் கஞ்சா பண்டல்களை கடலில் வீசினார். இருந்த போதிலும் உடனடியாக கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.
மேலும் அந்த பைபர் படகை சுற்றிவளைத்து அதில் இருந்த வாலிபரை கைது செய்தனர். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 304 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி எனவும், கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வாலிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் கஞ்சா போதை பொருளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனைக்கு பின் விடுதலை ஆனவர் என்று கூறப்படுகிறது.