உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோடு அருகே லாரி மோதி விசைத்தறி தொழிலாளர்கள் 2 பேர் பலி
- சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஏமப்பள்ளி அக்கம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (42), இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு உதயா என்ற ஒரு மகன் உள்ளார்.
இதே போல் திருச்செங்கோடு அருகே உள்ள பொம்மக்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (36). இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சக்தி என்ற மகனும், யசோதா என்ற மகளும் உள்ளனர்.
விசைத்தறி தொழிலாளர்களான மயில்சாமியும், மகேந்திரனும் உறவினர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் நேற்று அனிமூர் பிரிவு என்ற இடத்தில் வெள்ளரிக்காய் வாங்கி கொண்டு சாலையோரம் இருந்த புளிய மரத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவர் திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை நோக்கி லாரி ஓட்டி சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி பலியானார். இதில் மகேந்திரன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகேந்திரனும் பலியானார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான லாரி டிரைவர் கார்த்திகேயனை தேடி வருகிறார்கள்.