உள்ளூர் செய்திகள்

3 நாள் கோவை நிகழ்ச்சிகள் முடிந்து அமித்ஷா டெல்லி திரும்பினார்
- ஈஷா மையத்துக்கு சென்ற அவரை சத்குரு ஜக்கிவாசுதேவ் உற்சாகமாக வரவேற்றார்.
- தியான லிங்கத்தில் ஜக்கிவாசுதேவ் தலைமையில் நடந்த பஞ்சபூத வழிபாட்டில் பங்கேற்றார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இரவு கோவை வந்தார்.
நேற்று காலை பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கோவை மாநகர், மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தை திறந்துவைத்தார். பின்னர் மாலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா மையத்துக்கு சென்றார். அங்கு நடந்த மகாசிவராத்திரி விழாவில் அவர் கலந்து கொண்டார்.
ஈஷா மையத்துக்கு சென்ற அவரை சத்குரு ஜக்கிவாசுதேவ் உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து அங்குள்ள சூர்யகுண்டம், நாகசன்னதி, லிங்கபைரவி கோவிலுக்கு சென்று வணங்கினார். தியான லிங்கத்தில் ஜக்கிவாசுதேவ் தலைமையில் நடந்த பஞ்சபூத வழிபாட்டில் பங்கேற்றார்.
பின்னர் ஆதியோகி சிலை முன்பு யாகவேள்வியை நெருப்பு மூட்டி மகாசிவராத்திரி விழாவை தொடங்கிவைத்தார். சில மணி நேரம் அங்கிருந்த அமித்ஷா, இரவில் ஈஷா யோகா மையத்தில் உள்ள தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார்.
இன்று காலை அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.