இந்தியா

ஜனவரியில் இருந்து 2,417 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது: மத்திய அரசு
- சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
- வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
புதுடெல்லி:
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம், சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது.
கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது.
சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒரு நாடு கூறுமேயானால், நாங்கள் அத்தகைய நபர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோம்.
சட்டபூர்வமற்ற முறையில் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்கிறோம்.
சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள் குறித்து நாங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வி நிலையங்களில் சேரமுடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.