இந்தியா

கணவரிடம் கோபித்துக் கொண்டு ரெயில் நிலையம் சென்ற பெண்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்
- 35 வயது பெண் ஒருவர் கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
- இருநாளுக்குப் பின் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார்.
சண்டிகர்:
அரியானாவின் பானிபட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த 24-ம் தேதி தனது கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இரு நாளுக்குப் பிறகும் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கால் துண்டான நிலையில் சோனிபட் அருகே உள்ள மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விசாரணையில் அப்பெண் கூறியதாக போலீசார் தெரிவித்த விவரம் வருமாறு:
வீட்டில் இருந்து வெளியேறியதும் அந்தப் பெண் பானிபட் அருகே உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் சோகமாக அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அவரது கணவர் அனுப்பியதாக கூறி அறிமுகமானார்.
அதன்பின், ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் ஒன்றின் காலி பெட்டியில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் 2 பேர் அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் விடாத அவர்கள், அவரை சோனிபட்டுக்கு கடத்திச் சென்றனர். அங்கே ரெயில் தண்டவாளத்தில் வீசினர். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் பெண்ணின் கால் சிக்கி துண்டானது என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பானிபட் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
அரியானாவில் நடந்த இத்தகைய கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.