இந்தியா

தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் மாற்றம்- பீகார் தேர்தலில் இருந்து அமலுக்கு வருகிறது
- வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
- நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், கட்டாயம் மறு சரிபார்ப்புக்கு அனுப்ப வேண்டும்.
புதுடெல்லி:
பீகார் மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை இந்திய தேர்தல் கமிஷன் நடத்தி முடித்துள்ளது. இதன் மூலம் சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக நீக்கப்படுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க மோசடியை தடுக்க புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அதாவது வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஆனால் அதன் முடிவுகள், மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, அனைத்து சுற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தற்போதைய மாற்றத்தின்படி, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.
அதாவது 20 சுற்று எண்ணிக்கை என்றால், 18-வது சுற்று எண்ணிக்கை முடிந்த பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் பிறகு கடைசி 2 சுற்று வாக்குகள் எண்ணப்படும். அதே நேரம் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், கட்டாயம் மறு சரிபார்ப்புக்கு அனுப்ப வேண்டும்.
இது தொடர்பாக மாநில தேர்தல் கமிஷனர்களுக்கு, தேர்தல் கமிஷன் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
முன்பு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், வீட்டில் இருந்தே வாக்களிக்க வசதியாக அவர்களுக்கும் தபால் வாக்குகள் கொடுக்கப்பட்டுள்ளதால், தபால் வாக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. அதன் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்த புதிய முறை வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் செயல்முறையை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் கடந்த 6 மாதங்களில் 29 முக்கியமான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது என்றனர்.