கிரிக்கெட் (Cricket)

WTC இறுதிப் போட்டி: இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 218 ரன் முன்னிலை
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெறுவது ஆஸ்திரேலியாவா, தென் ஆப்பிரிக்காவா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.