கிரிக்கெட் (Cricket)

நிதிஷ் ராஜகோபால் அதிரடி: திருப்பூரை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது சேலம்
- டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது.
சேலம்:
டி என் பி எல் தொடரின் 9-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதிரடியாக ஆடிய துஷார் ரஹேஜா 16 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால் தலா 25 ரன்கள் எடுத்தனர்.
சேலம் அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. நிதிஷ் ராஜகோபால் அரை சதம் கடந்தார். அவர் 44 பந்தில் 69 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஆர்.கவின் 34 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் பூபதி குமார் 19 ரன்னும், ஹரிஷ் குமார் 23 ரன்னும் எடுத்து பொறுப்புடன் ஆடினர்.
இறுதியில், சேலம் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. சேலம் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.