கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு டி20 தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா
- இத்தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஜிம்பாப்வே தோல்வி கண்டது.
- இதனால் ஜிம்பாப்வே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. பிரையன் பென்னட் 61 ரன்கள் அடித்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
ஆனால் கேப்டன் ரஸ்ஸி வான்டர் டுசென்-ரூபின் ஹெர்மன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.
ஹெர்மன் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வான் டர் டுசென் 52 ரன்னும், பிரெவிஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்ட ஜிம்பாப்வே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.