கிரிக்கெட் (Cricket)

2வது டி20 போட்டியில் அயர்லாந்தை போராடி வென்றது ஜிம்பாப்வே
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
ஹராரே:
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என ஜிம்பாப்வேவும் கைப்பற்றின.
இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லோர்கன் டக்கர் 46 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் ட்ரெவர் குவாண்டு 3 விக்கெட்டும், ரிச்சர்ட் ங்வாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிக்கந்தர் ராசா 22 ரன், ரியான் பர்ல் 27 ரன் எடுத்து அவுட்டாகினர்.
அந்த அணியின் டோனி முன்யோங்கா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது. டோனி முன்யோங்கா 43 ரன் எடுத்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.