தமிழ்நாடு செய்திகள்

இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி வளர்ச்சி அடையவில்லையா?- கே.என். நேரு பதில்
- கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது.
- முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பாக செய்திருக்கிறார்.
தமிழக அமைச்சர் கே.என். நேரு இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அன்றைய மாவட்ட ஆட்சியர் இதை சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் சொன்னால்?.
நாங்கள் வளர்ந்திருக்கிறோம். முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பாக செய்திருக்கிறார். அதை வைத்து துணிந்து மக்களிடம் செல்வோம். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு மணப்பாறை சிப்காட்டில் புதிய நிறுவனம் வரப்போகிறது. அந்த நிறுவனம் அமைந்த பிறகு, திருச்சி முகமே மாறும் என தொழில் அதிபர் சொல்லியிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் சொல்லியிருக்கிறார்கள்.
2026-ல் நாங்கள்தான் நிற்கிறோம், நாங்கள்தான் ஜெயிப்போம். தளபதி மீண்டும் முதல்வர் ஆவார். டெல்டாவில் மிகவும் அதிகமாக தொகுதிகளை வென்று கொடுப்போம்.
இவ்வாறு கே.என். நேரு தெரிவித்தார்.