தமிழ்நாடு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் போலி அடையாள பட்டை அணிந்து விஜய்யை சந்திக்க வந்த மர்ம நபர்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள பட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார்.
- அவர் மீது சந்தேகப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அவரது அடையாள அட்டையை கேட்டனர்.
கே.கே. நகர்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை சந்திப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
விஜய் வருகையையொட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர் ஒருவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள பட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார். அவர் மீது சந்தேகப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அவரது அடையாள அட்டையை கேட்டனர்.
அப்போது அவர் கழுத்தில் இருந்து அடையாள அட்டை இல்லாமல் வெறும் கழுத்து பட்டை மட்டும் அணிந்து விஜயை அருகில் சந்திப்பதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அந்த பட்டையை பறித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பினர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.