தமிழ்நாடு செய்திகள்

மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: நிகிதா நகை திருட்டு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மீண்டும் தொடக்கம்
- அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
- பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரை நகை திருட்டு புகாா தொடர்பாக சிறப்பு படை பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் 2 மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அறிக்கையில் பிழைகள் இருப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றம் அதனை திருப்பி அனுப்பியது. பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் நிகிதா புகார் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அருண்குமார், கோவில் ஊழியர்கள், அஜித்குமார் தாக்குதல் தொடர்பாக வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன், நிகிதாவிடம் இருந்து கார் சாவி வாங்கிக்கொடுத்த கண்ணன், அஜித் நண்பர் வினோத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.