தமிழ்நாடு செய்திகள்

அஞ்சலி செலுத்துவதற்கு வந்தேன்... அரசியல் பேச விருப்பம் இல்லை- உதயநிதி
- சமூக நீதிக்காக தியாகி இமானுவேல் சேகரன் அரும்பாடுபட்டவர்.
- மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ.3 கோடி நிதி ஒதுக்கினோம்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூகநீதி போராளி தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நாளில் முதலமைச்சரின் அறிவுரைப்படி நானும், மூத்த அமைச்சர்களும் இங்கு மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக தியாகி இமானுவேல் சேகரன் அரும்பாடுபட்டவர்.
அவருக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ.3 கோடி நிதி ஒதுக்கினோம். அதில் தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் அதனுடைய பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறந்து வைக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க., பாஜகவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக நீங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறீர்களே அதுபற்றி கூறுங்கள் என்ற நிருபர்கள் கேட்டதற்கு, இங்கு அஞ்சலி செலுத்துவதற்காக தான் வந்தேன். அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.