தமிழ்நாடு செய்திகள்

திருச்சியில் இருந்து நாமக்கல் புறப்பட்ட விஜய்- வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
- விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
- சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13-ந்தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
முதல் நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் திருச்சியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டதால் விஜய் பிரசாரம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பிரசாரம் செய்தார். பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த அவர் மற்றொரு நாள் வருவதாக தெரிவித்தார்.
அதன்படி பெரம்பலூரில் நவம்பர் 1-ந்தேதி விஜய் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் 3-வது கட்டமாக விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று காலையில் அவர் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். காலை 9.30 மணியளவில் அவர் திருச்சியை அடைந்தார்.
இதனை தொடர்ந்து விஜய், பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் வரும் வழி முழுவதும் சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று விஜய்யை வரவேற்கின்றனர். அவர்களை பார்த்தப்படி விஜய் கையசைத்தப்படியும், வணக்கம் தெரிவித்தப்படியும் வந்தார்.