உலகம்

இஸ்ரேலில் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி - கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நெதன்யாகு நன்றி
- ஜெருசலேம் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரரால் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.