கிரிக்கெட் (Cricket)

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பிரீட்ஸ்கே: குவியும் பாராட்டு
- முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் பிரீட்ஸ்கே 88 ரன்னும், ஸ்டப்ஸ் 74 ரன்னும் அடித்தனர்.
மெக்காய்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிரீட்ஸ்கே 88 ரன்னும், ஸ்டப்ஸ் 74 ரன்னும் அடித்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஜம்பா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவரில் 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, ஒருநாள் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 5 விக்கெட்டும், பர்கர், செனுரன் முத்துசாமி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே அந்தப் போட்டிகள் அனைத்திலும் 50+ ரன்கள் அடித்துள்ளார்.
தனது முதல் போட்டியில் 150 ரன்கள் அடித்து அசத்தியவர், அடுத்த 3 போட்டிகளிலும் முறையே 83, 57 மற்றும் 88 ரன்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 4 ஒருநாள் போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பிரீட்ஸ்கே படைத்துள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதற்குமுன் இந்தியாவின் நவ்ஜோத் சித்து தனது முதல் ஐந்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.