அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா, சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடை பிடித்தது.
இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.
மேலும் சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது. இதையடுத்து மோடி எப்போதும் எனக்கு நண்பர் தான். இந்தியா- அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீன அதிபர் ஜின் பிங்குடன் டிரம்ப் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு தென் கொரியாவின் ஜியாங்சு நகரில், அக்டோபர் இறுதியில் தொடங்கி, நவம்பர் தொடக் கம் வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவருடன் உயர்மட்ட ஆலோசகர்களும் செல்ல உள்ளனர்.
மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப், ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு குறித்து தீவிர விவாதங்கள் நடந்துள்ளது. ஆனால் இன்னும் உறுதியான திட்டங்கள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும்போது, "டிரம்பின் தென்கொரிய பயணத்தில் பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும்" என்றார்.