நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கார்த்திக் என்பவருடன் கடந்தாண்டு திருமணம் நடந்தது. தற்போது இந்திரஜாவிற்கு 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
திருமணத்திற்கு முன்பு பிகில், விருமன் படங்களில் நடித்துள்ள இந்திரஜா, திருமணத்திற்கு பின்பு நடிப்பதை தவிர்த்தார். குழந்தை பிறந்த பிறகு குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை பயன்படுத்துவது குறித்து யூடியூப், இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டு வருகிறார். .
அண்மையில், அவரின் 6 மாத குழந்தைக்கு ஹெகுரு (Heguru) என்ற பயிற்சி முறையை கற்பித்ததாகவும், அது குழந்தைக்கு அறிவுத்திறனை வளர்க்க உதவும் என்றும் கூறி வீடியோ ஒன்றை இந்திரஜா பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக 6 மாத குழந்தைக்கு எதற்கு பயிற்சி, குழந்தையை அவர்களாகவே வளரவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்திரஜாவை வறுத்தெடுத்தனர்.
நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து இந்திரஜாவும், அவருடைய கணவரும் சேர்ந்து 'உங்கள் பாண்டியம்மா' என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் இந்திய அரசு குழந்தை வளர்ப்பு குறித்து பல்வேறு விசயங்களை செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியுள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானது என்றும், அதை பின்பற்ற வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் உண்மை சரிபார்ப்பு அமைப்பு FACT CHECK செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன.
தவறான தகவல் 1 : ஹெகுரு என்ற கல்விமுறை/பயிற்சியைப் பற்றி இந்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் இந்த பயிற்சி மையம் செயல்படுகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட Navchetana - National framework for early childhood stimulation for children from birth to three years, 2024. இது குழந்தை நலன் மற்றும் பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணம். இதில் ஹெகுரு குறித்தோ, Right-Brain activation குறித்தோ எந்த தகவலும் இல்லை. இதிலுள்ள "Early childhood stimulation" என்ற வார்த்தையை மட்டும் வைத்து, இந்த கட்டமைப்பு குறித்த செய்திகளைத் திரித்து கூறுகின்றனர்.
தவறான தகவல் 2 : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறனோ, மூளை வளர்ச்சியோ குறைந்ததாக எந்த தரவுகளும் இல்லை. இந்த தகவல் அவர்கள் குறிப்பிடும் நவ்சேத்னாவிலும் இல்லை.
தவறான தகவல் 3 : ஒன்றிய அரசு இந்த Right-Brain activation பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.
அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த Right-Brain activation அல்லது ஹெகுரு போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்தத் தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.
தவறான தகவல் 4: குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது.
இது திரிக்கப்பட்ட தகவல், நவ்சேத்னா குழந்தைகளை மூன்று வயது வரை வீட்டில் வளர்ப்பதையே ஊக்குவிக்கிறது. குழந்தையைப் பராமரிக்க வாய்ப்பில்லாத நிலையில் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது.
மேலும், ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்றும் கூறுகிறார். இதுவும் தவறான தகவல். சென்னையில் செயல்படும் ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இது 'JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION' என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இணையதளப் பக்கத்திலும் "RIGHT BRAIN EDUCATION" என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.
தவறான தகவல்களைப் பரப்பாதீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.